சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு மருத்துவர்கள் கடந்த 24ம் தேதி முதல் மேற்கொண்டுள்ள வேலை நிறுத்தம் 4வது நாளாக இன்றும் நீடிக்கிறது. அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் குறித்து அவர்களுடன் அரசு பேசி சுமுகத் தீர்வை ஏற்படுத்துவதன் மூலமாகவே இவை சாத்தியமாகும். இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே இரு சுற்று பேச்சுகள் நடத்தப்பட்டு, அவற்றில் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாக அறிகிறேன்.
இரு தரப்பும் இன்னும் சற்று நெகிழ்வுத் தன்மையை கடைபிடிக்கும் பட்சத்தில் தீர்வு சாத்தியமாகிவிடும். எனவே, அமைச்சர் விஜயபாஸ்கர் தலைநகரம் திரும்பும் வரை காத்திருக்காமல் அடுத்த நிலையில் உள்ளவர்கள் அரசு மருத்துவர்களுடன் பேசி தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் அரசு மருத்துவர் கோரிக்கைகளை தமிழக அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என கூறியுள்ளார்.