சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சத்தியமூர்த்திபவனில் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்குநேரி தொகுதியில் 25 நாட்கள் தங்கியிருந்து கிராமம் கிராமமாக சென்று பார்த்தேன். எனது அனுபவத்தில்பட்டது, பொதுமக்கள் அந்த தேர்தலை அரசியல் ரீதியாக பார்க்கவில்லை. குறிப்பாக உழைக்கிற மக்கள், பெண்கள் இவர்களெல்லாம் அதை ஒரு திருவிழாவாகவே கருதினர். அவர்கள் எந்த கட்சிக்கும், எந்த அரசியலுக்கும், எந்த வேட்பாளருக்கும் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.
யார் அதிகமாக அவர்களுக்கு செய்தார்களோ அவர்களுக்கு நியாயமாக வாக்களிப்பது என்று நடந்து கொண்டார்கள். எனவே இதில் வேறுவிதமாக சிந்திப்பதில் பலன் இல்லை என்பது எனது கருத்து. 3 மாதத்துக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் திமுக வேட்பாளர் ஏறக்குறைய 35ஆயிரம் வாக்குகள் அதிகமாக பெற்றுள்ளார். மூன்றே மாதத்தில் அந்த வாக்குகள் காணாமல் போய்விட்டன. எனவே இந்த 3 மாதத்தில் அரசியல் ரீதியாக மக்கள் வேறு முடிவை எடுத்திருக்கிறார்கள் என்று சொல்ல முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.