புதுடெல்லி: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இரவு சவுதி அரேபியா புறப்பட்டார். ரியாத்தில் நடைபெறும் எதிர்கால முதலீட்டு நிறுவன மன்ற அமர்வில் அவர் கலந்து கொள்கிறார். சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல்லாசிஸ் அல்சாத் மற்றும் இளவரசர் முகமது பின் சல்மான் அல்சாத் ஆகியோரையும் பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.சவுதி பயணத்தின் போது பிரதமர் மோடியின் விமானம் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்த இந்தியா சார்பில் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், காஷ்மீரில் மனித உரிமை மீறல் நடைபெறுவதாக காரணம் கூறி, மோடியின் விமானம் பாகிஸ்தான் வழியாக செல்வதற்கு அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மகமூத் குரேஷி மறுப்பு தெரிவித்துவிட்டார். கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது, பாக். வான்வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. ஜனாதிபதி ராம் நாத் கோவிந்திற்கும் பாகிஸ்தான் வான் எல்லை வழியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்வதேச விமான போக்குவரத்து அமைப்பின்(ஐசிஓஏ) விதிமுறைகளை மீறிய செயல். எனவே, பாகிஸ்தானின் செயல் குறித்து ஐசிஓஏவிடம் இந்தியா புகார் தெரிவித்துள்ளது.