புதுடெல்லி: இறக்குமதி வரி உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு காரணமாக ஐபோன் விற்பனை, லாபம் இந்த ஆண்டு முதல் முறையாக சரிந்துள்ளது. இந்திய சந்தையில் ஆப்பிள் நிறுவனம் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு சர்வதேச சந்தைகள் கைவிட்டபோதும் இங்கு ஐபோன்களுக்கு கிராக்கி அதிகம் இருப்பதுதான் காரணம். இருப்பினும், நடப்பு ஆண்டில் முதல் முறையாக ஐபோன் விற்பனை சரிவால் ஆப்பிள் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது.
இந்த நிறுவனம் பங்குச்சந்தையில் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பில், வருவாய் 19 சதவீதம் குறைந்து ₹10,538 கோடியாகவும், லாபம் 70 சதவீதத்துக்கு மேல் சரிந்து 262 கோடியாகவும் உள்ளது என தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் இந்த நிறுவனத்தின் லாபம் 896 கோடியாக இருந்தது. ஆப்பிள் நிறுவனம் சில ஐபோன் மாடல்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது. இருப்பினும், சில பாகங்களை இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. மத்திய அரசு இறக்குமதி வரியை உயர்த்தியதாலும், ரூபாய் மதிப்பு சரிந்ததாலும் அவற்றின் விலை உயர்ந்தது. இதுவே விற்பனை, லாபம் குறைந்ததற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.