ஓசூர்: ஓசூர் அடுத்த கெலவரப்பள்ளி அணைக்கு வினாடிக்கு 720கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. கர்நாடக மாநிலம் தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்பு பகுதிகளான நந்திமலை, தொட்டப்பள்ளப்புரம், கே.ஆர்.புரம், பெங்களூரு, சர்ஜாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அவ்வப்போது அதிகரிப்பதும் குறைவதுமாக உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக 960 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 720 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீரும் அப்படியே தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது. முழுகொள்ளளவான 44.28 அடியில் தற்போது 41.66அடி தண்ணீர் உள்ளது.