பிரிட்டன்: ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் உடன்பாட்டை இறுதி செய்ய ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபர் 31ம் தேதி வரை முடிவடைய உள்ள பிரெக்சிட் உடன்பாட்டுக்கான கெடு தேதியை ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பிரிட்டனுக்கு கால நீட்டிப்பு வழங்கும் முடிவுக்கு ஐரோப்பியக் கூட்டமைப்புத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிரெக்சிட் : அக் 31 வரை
ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற முடிவு செய்துள்ளது. இது தொடர்பான பிரக்சிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியாமல் பிரதமர் போரிஸ் ஜான்சன் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார். பிரெக்சிட் என்று அழைக்கப்படும் இதற்கான நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக நடந்து வருகிறது. இந்த நிலையில் அக்., 31க்குள் வெளியேறுவதற்கு பிரிட்டனுக்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 நாடுகளின் தலைவர்களுடன் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பேச்சு நடத்தினார். அதையடுத்து புதிய ஒப்பந்தம் தயாரானது.
இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பார்லி ஒப்புதல் அளிக்க வேண்டும்.பிரதமர் ஜான்சனின் புதிய ஒப்பந்தத்துக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஜான்சனின் பழமைவாதக் கட்சியின் கூட்டணியில் இடம்பெற்றுஉள்ள அயர்லாந்தின் டி.யு.பி. கட்சியும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏற்கனவே பார்லியில் போதிய பெரும்பான்மை இல்லாத நிலையில் ஜான்சனின் இந்த ஒப்பந்தத்துக்கு பார்லி ஒப்புதல் அளிக்குமா என்ற கேள்வி எழுந்தது.இந்த நிலையில் பார்லியில் நீண்ட நேரம் விவாதம் நடந்தது.
காலக்கெடுவை நீட்டிக்க கோரிய மசோதா நிறைவேற்றம்
அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி வரை அவகாசம் கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் திருத்தம் கொண்டு வந்தன. இதன் மீது நடைபெற்ற ஓட்டெடுப்பில் பெரும்பாலான எம்.பி.க்கள் திருத்த தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளித்தனர்.322 எம்.பி.க்கள் சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாகவும் 306 எம்.பி.க்கள் எதிர்த்தும் வாக்களித்தனர். 16 வாக்குகள் வித்தியாசத்தில் லெட்வின் சட்டத்திருத்தம் என பெயரிடப்பட்டுள்ள இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க கோரி ஐரோப்பிய கூட்டமைப்புக்கு பிரதமர் போரிஸ் ஜான்சன் கடிதம் எழுதியிருந்தார்.
2020 ஜனவரி 31 வரை அவகாசம் நீட்டிப்பு
இந்நிலையில், பிரிட்டன் வெளியேறுவதற்கு எவ்வளவு காலம் அவகாசம் வழங்குவது என்பது குறித்து ஐரோப்பிய யூனியன் ஆலோசித்தது. ஐரோப்பிய யூனியனில் உள்ள 27 உறுப்பு நாடுகளும் பிரக்சிட் ஒப்பந்தம் இந்த மாதம் முடிந்த பின்னரும் தாமதமாவதை ஒப்புக் கொண்டுள்ளன. இதற்கான கால அவகாசம் குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்த நிலையில், பிரெக்சிட் உடன்பாட்டை இறுதி செய்ய ஜனவரி 31ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.