×

கொடைக்கானல் - கும்பக்கரை சாலையில் மீண்டும் மண்சரிவு 10 மலைக்கிராமங்கள் தனித்தீவாக தத்தளிப்பு: பொதுமக்கள் கடும் அவதி

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதியில் தொடர் மழை காரணமாக கும்பக்கரை சாலையில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டு 10க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களின் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியுலக தொடர்பின்றி பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த ஒரு மாதமாக தொடர்மழை பெய்து வருகிறது. அவ்வப்போது காற்றுடன் கனமழையும் பெய்து வருவதால் பிரதான சாலைகளில் மரம் விழுந்தும், மண்சரிவு ஏற்பட்டும், பாறைகள் உருண்டும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த அக்.21ம் தேதி பெய்த கனமழை காரணமாக கொடைக்கானல் - அடுக்கம் - கும்பக்கரை சாலையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

நேற்று அதிகாலை இதே பகுதியில் மீண்டும் மிகப்பெரிய மண்சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு கிடப்பதால் இருபுறமும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த சாலையை தான் அடுக்கம், பாலமலை, காட்டுபள்ளம், தாமரைக்குளம் உள்ளிட்ட மலைக்கிராம மக்கள் பெரியகுளம் சென்று வர பயன்படுத்துகின்றனர். இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள், பழங்களை சந்தைக்கு எடுத்து செல்ல இச்சாலையைத்தான் பயன்படுத்தி வந்தனர். இந்த சாலை துண்டிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதி மலைக்கிராமங்கள் வெளியுலகத் தொடர்பின்றி தனித்தீவாக தத்தளிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானலுக்கு சுற்றுலா வர இச்சாலையும் ஒரு வழியாக உள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள மிகப்பெரிய மண்சரிவால் இந்த சாலை இருபுறமும் துண்டிக்கப்பட்டு விட்டதால் இப்பகுதி மக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள், சுற்றுலாப்பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மண்சரிவால் உருண்டு கிடக்கும் பாறைகளை வெடி வைத்து அகற்றி வருகிறோம், விரைவில் இப்பணி முடிவடையும் என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். கொடைக்கானல் மலைப்பகுதியில் மண்சரிவு ஏற்படும் பகுதிகளை நிபுணர் குழு ஆய்வு செய்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,Kodaikanal - Kumbakarai ,hill villages , Landslides, Kodaikanal - Kumbakarai road,again, 10 hill villages
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...