பனாஜி: கோவா கடலில் ஆளுநர் மாளிகையை நோக்கி நகர்ந்து வரும் நாப்தா நிரப்பப்பட்ட சரக்கு கப்பலை கட்டுப்படுத்த, மும்பை, புனே நிபுணர்களின் உதவியை கோவா அரசு நாடியுள்ளது. கோவாவில் உள்ள மர்மகோவா துறைமுகத்தில் நிறுப்பப்பட்டு இருந்த 3 ஆயிரம் டன் எடையுள்ள ஆளில்லா சரக்கு கப்பல், கடல் கொந்தளிப்பு காரணமாக நங்கூரத்தை விட்டு நழுவி நேற்று முன்தினம் நகரத் தொடங்கியது.
அதில், ஊழியர்களோ, கப்பல் கேப்டனோ இல்லை. தற்போது, இந்த கப்பல் துறைமுகத்துக்கு எதிர் திசையில் உள்ள கோவா ஆளுநர் மாளிகையை நோக்்கி நகர்ந்து வருகிறது. இதில், மிகவும் எளிதாக தீப்பற்றக்கூடிய நாப்தா எரிபொருள் நிரப்பப்பட்டு உள்ளது. இதனால், கப்பல் தரை தட்டினால் மிகப்பெரிய அளவில் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, கப்பல் தரை தட்டுவதை தடுக்கவும், அது நகர்ந்து வருவதை நிறுத்தவும் மும்பை, புனேயை சேர்ந்த கப்பல் நிபுணர்களின் உதவியை கோவா அரசு நாடியுள்ளது. இந்நிலையில், கப்பலில் உள்ள நாப்தா எரிபொருளை சிறிய கப்பல்கள், படகுகளின் மூலமாக இன்றைக்குள் மாற்றுவதாக கப்பலின் உரிமையாளர்கள் அரசுக்கு உறுதி அளித்துள்ளனர்.