×

அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சியில் குழந்தையின் இரு கைகளும் கட்டப்பட்டுள்ளதாக தகவல்

திருச்சி: திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி, தொடர்ந்து 26 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. சுஜித்தை மீட்க அண்ணா பல்கலை கழக குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறிய ரோபோ மூலம் எடுத்த முயற்சியில் குழந்தையின் இரு கைகளும் கட்டப்பட்டுள்ளதாக தெரியவந்ததை அடுத்து சற்று நேரத்தில் குழந்தையை மேலே துாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குழி தோண்ட போர்வெல் இயந்திரம் கொண்டுவரப்படுகிறது. குழந்தையை மீட்க, என்.எல்.சி., ஓ.என்.ஜி.சி., மற்றும் தீயணைப்பு துறை குழு தொடர்ந்து முயற்சி செய்துவருகிறது. சிறுவன் விழுந்த இடத்திலிருந்து அருகே கிணறு போன்ற சுரங்கம் 1 மீட்டர் அகலத்திற்கு 90 அடிக்கு குழி தோண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த குழிக்குள் இறங்க 3 வீரர்கள் தாயராக உள்ளனர்.

திருச்சி, மணப்பாறை அருகே, வேங்கைக்குறிச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பிரிட்டோ ஆரோக்கியராஜ். இவரது மனைவி கலாராணி. இவர்களின் மகன் சுஜீத் வில்சன், 2. ஆரோக்கியராஜ் வீட்டுக்கு பக்கவாட்டில், அவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. மழை பெய்ததால், சோளம் பயிரிட்டுள்ளனர். நிலத்தில், நான்கு ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு, துார்ந்து போன ஆழ்துளை கிணறு, மூடப்படாமல் உள்ளது. நிலத்தில், ஒரு அடிக்கு மேல் சோளம் வளர்ந்துள்ளது. நேற்று மாலை 5:30 மணியளவில், கலாராணி மற்றும் சிலர், வீட்டின் முன் இருந்துள்ளனர். பக்கவாட்டு நிலத்தில், சுஜீத் வில்சன் விளையாடிக் கொண்டிருந்தான். திடீரென குழந்தையின் அலறல் கேட்டுள்ளது. ஓடிச் சென்று பார்த்தபோது, மூடாமல் விட்ட ஆழ்துளைகிணற்றில், குழந்தை விழுந்தது தெரிந்தது.

தகவலறிந்து, மணப்பாறை போலீசார், தீயணைப்பு துறையினர் வந்தனர். சுஜித், 20 - 25 ஆடி ஆழத்துக்குள் இருப்பது தெரிந்தது. ஆழ்துளை குழாயின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டி, குழந்தையை மீட்க முடிவு செய்யப்பட்டது. பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு, பள்ளம் தோண்டும் பணி, தீவிரமாக நடந்தது.ஒருபுறம் குழந்தையை மீட்க, தீயணைப்பு துறையினர் போராட, மறுபுறம், குழந்தைக்கு எதுவும் நடக்காத வகையில், டாக்டர்கள் குழுவினர், ஆழ்குழாய் உள்ளே ஆக்சிஜன் செலுத்தினர். குழிக்குள் விழுந்த குழந்தை பயப்படாமல் இருக்க, குழிக்குள் விளக்கும், குழந்தையை கண்காணிக்க, கேமராவும் பொருத்தப்பட்டது. மணிகண்டன் என்பவர் வடிவமைத்த பிரத்யோக கருவி வரவழைக்கப்பட்டு குழந்தையை மீட்கும் பணி நடந்தது. இம்முயற்சி தோல்வியடைந்ததை அடுத்து, பின்னர் கோவையிலிருந்தும் மீட்பு குழுவினர் வந்து முயற்சித்தனர்.

இந்த முயற்சியும் தோல்வியடைந்ததால். மீண்டும் பக்கவாட்டில் பொக்கலைன் மூலம் நாலாபுறம் பள்ளம் தோண்டி குழந்தையை மீட்க முயற்சி நடந்தது. 15 அடிக்கு கீழே பாறை தென்பட்டதால் பள்ளம் தோண்டும் பணியும் கைவிடப்பட்டது. ஆழ்துளை கிணற்றில் 20 அடியில் சிக்கிய குழந்தை 100 அடிக்கும் கீழ் சென்று விட்டார். தற்போதைய நிலையில், குழந்தை அசைவற்ற நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. கோவை, மதுரை குழுவினர் எடுத்த முயற்சி பலனளிக்காத நிலையில் நாமக்கல் குழுவும் குழந்தையை மீட்க முயற்சி எடுத்தது. அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, திருச்சி கலெக்டர் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் இருந்து, அடுத்த என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசித்தனர். சம்பவ இடத்தில் ஆம்புலன்சும், மருத்துவ குழுவுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Tags : baby ,university team ,Anna , baby's hands ,tied,small robot,Anna's university,team
× RELATED பச்சிளம் ஆண் குழந்தை கொல்லப்பட்ட...