பெங்களூரு: பண பரிமாற்றம் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமார் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. டெல்லி உள்ளிட்ட பல்ேவறு இடங்களில் பண பரிமாற்றம் செய்ததாக அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற விசாரணைக்கு பின்னர் அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜாமீன் கோரி டி.கே.சிவகுமார் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், டி.கே.சிவகுமார் பண பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டு விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை. அப்படியிருக்க டெல்லி உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை வழக்கறிஞர்களின் வாதத்தை ஏற்காமல் அவரை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்துள்ளது. அரசியலில் செல்வாக்குள்ள டி.கே. சிவகுமாரை ஜாமீனில் வெளியில் அனுப்பினால், அவர் பண பரிமாற்ற குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அழிக்கக்கூடும். எனவே, டெல்லி உயர்நீதிமன்றம் டி.கே.சிவகுமாருக்கு அளித்த நிபந்தனை ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இம்மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.