புதுடெல்லி: தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்க நாணயங்கள், நகை விற்பனை சூடுபிடிக்கும் என நகை வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சர்வதேச சந்தையில் தங்கம் விலை உயர்ந்து வருவதால், அதற்கேற்ப உள்ளூரிலும் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 4 மாதங்களில் சராசரியாக 30 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. தங்கத்துக்கு இறக்குமதி வரி அதிகரிப்பு, பொருளாதார மந்த நிலை காரணமாக விற்பனையும் சரிந்து விட்டது என நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தீபாவளி மற்றும் வடமாநிலங்களில் தந்தேராஸ் பண்டிகைக்கு தங்க நாணயங்கள், நகை விற்பனை அதிகரிப்பது வழக்கம். எனவே, இந்த ஆண்டும் நகை விற்பனை சற்று உயர வாய்ப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக பண்டிகை கால நகை தேவை காரணமாக விற்பனை சற்று விறுவிறுப்பாக உள்ளது.