மன்னார்குடி: டிக்டாக் செயலியால் காதலிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த காதலன், காதலியை கத்தியால் குத்திவிட்டு எலி மருந்தை தின்று தற்கொலைக்கு முயன்றார். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜெகதீஷ்பாபு(25). இவரும், நாகை மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவியும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் கடந்த 5 மாதங்களாக கோட்டூர் அருகே ஒன்றாக குடும்பம் நடத்தி வந்ததாக தெரிகிறது. ஆரம்பத்தில் ஒற்றுமையாக இருந்த இருவரிடையே மனகசப்பு ஏற்பட்டு அடிக்கடி தகராறு நடந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டிக்டாக் செயலி மூலம் அந்த மாணவிக்கும் நாமக்கல்லை சேர்ந்த பொன்னர்(25) என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு நாமக்கல்லுக்கு மாணவி சென்று விட்டார். இதனையறிந்த காதலன், மாணவியை போனில் தொடர்பு கொண்டு கோட்டூருக்கு வருமாறும் அங்கு வைத்து பிரச்னைகளை பேசி தீர்த்து கொள்ளலாம் என கூறினார். அதன்பேரில் அந்த மாணவி நாமக்கல் வாலிபரை அழைத்து கொண்டு கோட்டூருக்கு வந்துள்ளார். கோட்டூர் வந்த இருவரையும், ஜெகதீஷ்பாபு ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு களப்பால் கிராமத்தை நோக்கி செல்லும்போது வழியிலேயே அவருக்கும், அவரின் காதலிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த காதலன் ஜெகதீஷ்பாபு, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த மாணவியின் கழுத்தில் குத்திவிட்டு அதே இடத்தில் தானும் எலி மருந்தை தின்று விட்டார். அப்போது அவ்வழியே வந்தவர்கள் மாணவியை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கும், மயங்கி கிடந்த ஜெகதீஷ்பாபுவை மீட்டு மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.