சென்னை : நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் வழக்கறிஞர்கள், நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்படக் கூடாது என சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி அறிவுறுத்தியுள்ளார். சட்டப்படிப்பை படித்து முடித்த 400க்கும் மேற்பட்டோர் நேற்று மாலை வழக்கறிஞர்களாக பதிவு செய்து கொண்டனர். இதற்கான நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி வினீத் கோத்தாரி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில், ‘ஆண்களுக்கு சரிசமமாக பெண் வழக்கறிஞர்களும் பதிவு செய்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. கடின உழைப்பு, நேர்மை, பணிவு, மனிதாபிமானம் ஆகிய குணங்கள் இருந்தால் வழக்கறிஞர்கள் தொழிலில் வெற்றி பெறலாம். நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்ற உள்ள வழக்கறிஞர்கள், நாட்டின் நலனுக்கு விரோதமாக செயல்படக் கூடாது’ என்றார்.
முன்னதாக, காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், வழக்கறிஞருமான கிருஷ்ணசாமி, புதிய வழக்கறிஞர் பதிவை துவக்கி வைத்தார். பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் பதிவுக்குழு தலைவர் கே.பாலு வழக்கறிஞர்கள் பதிவுக்கான பிரமாணம் செய்து வைத்தார். நிகழ்ச்சியில், மூத்த வழக்கறிஞரும், முன்னாள் அட்டர்னி ஜெனரலுமான பராசரன், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர் அமல்ராஜ், துணைத்தலைவர் கார்த்திகேயன், இந்திய பார்கவுன்சில் இணை உறுப்பினர் பிரபாகரன் ஆகியோர் புதிய வழக்கறிஞர்களுக்கு அறிவுரை வழங்கினர்.