புதுடெல்லி: சிங்கம் 3 படத்தில் நடித்த நைஜீரிய நடிகர் ஓலா ஜேசன் டெல்லி விமான நிலையத்தில் சுற்றித்திரிந்தபோது கைது செய்யப்பட்டார். தமிழில் சூர்யா நடிப்பில் சிங்கம் படத்தின் 3ம் பாகமாக வந்த எஸ் 3 படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்ததுடன் இந்தியில் ஆமீர்கான் நடித்த தங்கல் மற்றும் கேரி ஆன் கேசார், ராக் தேஷ், ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் போன்ற படங் களில் நடித்திருப்பவர் முகமது அகான்பி ஓஜரா என்கிற ஓலா ஜேசன். நைஜீரியாவைச் சேர்ந்த இவர், சூப்பர் ஸ்டோரி, கிங் ஆப் மை வில்லேஜ் உட்பட சில நைஜீரிய படங்களில் நடித்து பிரபலமானவர்.
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஓலா ஜேசன் இன்று அதிகாலை சுற்றிக் கொண்டிருந்தார். அவரிடம் விமான நிலைய தொழில் பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தினார். அவரிடம் விஸ்தாரா விமானத்தில் கோவா செல்வதற்கான டிக்கெட் இருந்தது. பாஸ்போர்ட்டை பார்த்தபோது, அவரது விசா, கடந்த 2011 ஆம் ஆண்டே முடிந்துவிட்டது தெரியவந்தது. விசா காலம் முடிந்தும் அவர் தொடர்ந்து இங்கு தங்கியிருந்துள்ளார். இதுகுறித்து அவரிடம் அதிகாரிகள் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அதிகாரிகள் அவரை கைது செய்து உளவுத்துறையிடம் ஒப்படைத்தனர்.