மும்பை: வடகிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கியார் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரபிக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம்,திருவண்ணாமலை, நீலகிரி, கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதே போல கடலூர், விழுப்புரம், திருவாரூர், வேலூரில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது.
இந்நிலையில் வடகிழக்கு அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை கியார் புயலாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.கியார் (KYAAR) எனப் பெயரிடப்பட்டுள்ள புயல், மும்பையில் இருந்து 380கிமீ தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஓமனை அடையும் என்றும் புயலால் மும்பை, கோவாவில் உள்ள கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.