சென்னை: மாமல்லபுரத்தில் இந்திய - சீன மாநாட்டுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்தமைக்காக தமிழக முதல்வருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவித்து பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.
சீன அதிபரின் வருகையின் போது செய்யப்பட்ட வரவேற்பு ஏற்பாடுகள், அன்பான உபசரிப்புகள் மறக்கமுடியாத நிகழ்வு என்று பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். உச்சி மாநாட்டுக்கு சிறப்பான ஏற்பாடு செய்தமைக்கு தமிழக மக்களுக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் பாராட்டுகள் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
தமிழகம் வந்த இரு தலைவர்களும் கடந்த 11ம் தேதி மாலை 5 மணியளவில் மாமல்லபுரம் வருகை தந்தனர். முதலில் மாமல்லபுரம் பிரதமர் நரேந்திர மோடி தமிழக பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, தோளில் துண்டு அணிந்து சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்றார். தொடர்ந்து, இரு நாட்டு தலைவர்களும் சுற்றி பார்த்தபடி சந்தித்து பேசினர். முதலில் அர்ஜூனன் தபசு என்ற இடத்தில் பார்வையிட்டனர். அர்ஜூனன் தபசு பெருமைகள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார். மேலும், இருவரும் அர்ஜூனன் தபசு முன்புறம் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
தொடர்ச்சியாக, வெண்ணெய் உருண்டை கல்லிலை பார்வையிட்டனர். அப்போது, வெண்ணெய் உருண்டை கல்லின் தனித்துவத்தை பிரதமர் மோடி சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எடுத்துரைத்தார். மேலும், வெண்ணெய் உருண்டை கல் முன்புறம் இருவரும் கை உயர்த்தி புகைப்படம் எடுத்தனர். தொடர்ந்து, ஐந்து ரதங்களின் சிற்பங்களை கண்டு களித்ததுடன், அங்கு அமர்ந்து இருவரும் சிற்பங்கள் குறித்து பேசினர். அப்போது, சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு இளநீர் வழங்கி பிரதமர் மோடி உபசரித்தார்.
நிறைவாக மாமல்லபுரத்தின் பிரசித்தி பெற்ற கடற்கரை கோவிலுக்கு சென்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கோவிலின் சிற்பங்களை பார்வையிட்டனர். கோயிலின் உன்னத சிற்பங்கள் குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு பிரதமர் மோடி எடுத்துரைத்தார். இரு தலைவர்கள் வருகை அடுத்து கடற்கரை கோயில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.