×

மக்கள் சக்தியை திரட்டும் மு.க.ஸ்டாலின் முயற்சியை யாராலும் தடுக்க முடியாது: வைகோ அறிக்கை

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கை:  முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று நான் கூறியதாக தெரிவித்திருக்கிறார். அப்போதைய சூழ்நிலையில் நான் அதுபோன்று கருத்து தெரிவித்து இருக்கலாம். ஆனால், அக்கருத்து தவறானது என்பதை பின்னர் உணர்ந்தேன். தற்போது இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டு இருப்பதால் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மிகத்தெளிவான விளக்கத்தை அளித்திருக்கிறார். தமிழ்நாட்டில் பற்றி எரியும் எத்தனையோ பிரச்னைகளை திசை திருப்ப சிலர் முயல்கிறார்கள்.

ஹைட்ரோகார்பன் திட்டம், கூடங்குளத்தில் அணுக்கழிவு சேமித்து வைக்கும் திட்டம், நியூட்ரினோ ஆய்வகம், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை அமைக்கும் திட்டம், தூத்துக்குடி மாவட்டத்தைச் சூறையாடிய ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சி, காவிரியின் குறுக்கே மேகதாது அணையைக் கட்டி காவிரி நீரை தடுக்க முயற்சி, புதிய கல்விக் கொள்கை மூலம் மாநில உரிமைகளைப் பறித்து சமூகநீதிக்கு புதைகுழி தோண்டும் திட்டம், இதுபோன்ற மத்திய பா.ஜ அரசின் தமிழ்நாட்டுக்கு எதிரான துரோகங்களை மக்கள் மன்றத்தில் திசை திருப்புவதற்காக தி.மு.க மீது சிலர் உள்நோக்கத்தோடு கணைகள்  வீசுவதை தமிழக மக்கள் நன்றாக உணர்வார்கள். பா.ஜ அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு துணையாக இருப்பதையும் தமிழக மக்கள் அறிவார்கள். தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்கள் சக்தியை திரட்டும் மு.க.ஸ்டாலினின் முயற்சியை எவராலும் தடுத்துவிட முடியாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு கூறியுள்ளார்.  


Tags : No one ,MK Stalin ,Vaiko , People, MK Stalin, Vaiko
× RELATED சிஏஏ விவகாரத்தில் என்னை யாரும்...