சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ பலியான வழக்கில் ஜாமீன் கோரிய அதிமுக பிரமுகர் மற்றும் அவரது உறவினர் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததால் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் 12ம் ேததி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மகன் திருமணம் நடந்தது. இதற்காக வரும் துணை முதல்வர் உள்ளிட்டோரை வரவேற்பதற்காக சாலையின் நடுவே அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது ஒரு பேனர் விழுந்தது. இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த சுபஸ்ரீ மீது பின்னால் வந்த லாரி மோதியதில். இதில் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ பலியானார்.
இந்த சம்பவம் குறித்து, பள்ளிக்கரணை போலீசாரும், பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாரும் தனித்தனியாக இரு வழக்குகளை பதிவு செய்தனர். பின்னர், ஜெயகோபால், அவரது மைத்துனர் மேகநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து, இருவரும் ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சுபஸ்ரீயின் தந்தை ரவியின் சார்பில் ஜாமீன் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர்கள் இருவரும் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால் சாட்சிகளை கலைத்துவிட நேரிடும் என்று ரவியின் சார்பில் ஆஜரான வக்கீல் வாதிட்டார் அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல், இருவரது ஜாமீன் மனுவை திரும்ப பெறுவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ஜாமீன் மனுக்களை திரும்பப் பெற அனுமதி வழங்கி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.