சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்துக்கு காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் 6வது முறையாக 4 மாதம் கால நீட்டிப்பு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையத்தை கடந்த 2017ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி தமிழக அரசு அமைத்தது. தொடர்ந்து சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் கடந்த நவம்பர் 22ம் தேதி முதல் நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை தொடங்கினார். இதுவரை 5 முறை ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் விசாரணை ஆணையத்தின் கால அவகாசம் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைந்தது. இப்போது விசாரணை ஆணையத்தின் கால அவகாசத்தை 6வது முறையாக மேலும் 4 மாதங்கள் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.