சென்னை: சென்னை மருத்துவக்கல்லூரியிலும் ஒரு மாணவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சந்தேகம் உள்ளதாக அக்கல்லூரி நிர்வாகம் போலீசில் புகார் அளித்துள்ளது. தமிழக மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாணவர் உதித்சூர்யா ஆள்மாறாத்தில் ஈடுபட்ட விவகாரம் கடந்த மாதம் உறுதியானது. இதைத்தொடர்ந்து ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் மாணவர்களின் ஆவணங்களை சரிபார்க்க மருத்துவக்கல்வி இயக்ககம் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டது. இந்த வழக்கில் 60 பேர் வரை ஆள்மாறாட்த்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை மருத்துவக்கல்லூரியில் 2018ம் ஆண்டு சேர்ந்தவர் மாணவர் தனிஷ்குமார். இவர் தற்போது இரண்டாமாண்டு படித்து வருகிறார்.
இவர் நீட் தேர்வில் 435 மதிப்பெண் பெற்றிருந்த நிலையில், முதலாமாண்டு மருத்துவ தேர்வை சரிவர எழுதவில்ைல. இதுதொடர்பாக சென்னை மருத்துக்கல்லூரி முதல்வர் அலுவலகத்துக்கு புகார் மனு அனுப்பப்பட்டது. சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி குறிப்பிட்ட புகாரை, மருத்துவக்கல்வி இயக்ககல்வி இயக்குனருக்கு நடவடிக்கைக்காக அனுப்பி வைத்தார். குறிப்பிட்ட புகாரின் அடிப்படையில், மாணவர் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டாரா என்பதை அறிய காவல்துறையில் புகார் அளிக்குமாறு மருத்துவக்கல்வி இயக்குனர் சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில், சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் ஜெயந்தி பூக்கடை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில் மாணவர் தனிஷ்குமார் பீகார் மாநிலத்தில் இந்தியில் நீட் தேர்வு எழுதியுள்ளார். ஆனால் அவரால் சரளமாக இந்தி பேச முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் மாணவரின் குற்றம் நிருபிக்கப்பட்டால் அவர், பெற்றோர், முறைகேடுக்கு துணை போனவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
கைரேகை பதிவுகள் வந்தது
தமிழக மருத்துவக்கல்வி இயக்ககம் மாணவர்களின் கைரேகை பதிவுகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்தது. அதன்படி தமிழக மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கு நீட் தேர்வை நடத்திய என்டிஏ மாணவர்களின் கைரேகை பதிவுகள் மருத்துவக்கல்வி இயக்ககத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்மூலம் மீண்டும் ஒட்டுமொத்தமாக கைரேகை சோதிக்கப்படும்பட்சத்தில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்ப முடியாது.