பெங்களூரு: திருச்சியில், லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட முருகன் பெங்களூரு மேயோஹால் நீதிமன்றத்தில் அக்.11ம் தேதி சரணடைந்தார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதற்கிடையே பெங்களூருவில் அவர் மீது பதிவாகியிருந்த 83க்கும் அதிகமான திருட்டு, கொள்ளை வழக்குகள் தொடர்பாக விசாரணை நடத்த பொம்மனஹள்ளி போலீசார் அவரை 8 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அக்.16ம் தேதி அவரை காவலில் எடுத்த போலீசார், முருகன் இதுவரை திருடிய இடங்கள், திருட்டு நகைகளை பதுக்கி வைத்த இடங்கள் குறித்து விசாரணை நடத்தினர். இருப்பினும் அனை த்து வழக்குகள் குறித்த தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காவல் முடிந்து அவரை பெங்களூரு ஏ.சி.எம்.எம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலும், 8 நாட்கள் காவலில் எடுத்தனர்.
மூன்றே கால் கிலோ நகை பறிமுதல்: இதே வழக்கில் கைதான மதுரை கணேசனை திருச்சி நம்பர்-1 டோல்கேட் போலீசார் கடந்த 17ம் தேதி முதல் 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அவனிடமிருந்து பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த 1.75 கிலோ தங்க நகைகளும், லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த ஒன்றரை கிலோ தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.