பெங்களூர்: விஜய் ஹசாரே கோப்பையின் இறுதிப் போட்டியில் கர்நாடகாவை வீழ்த்தி 6வது முறையாக கோப்பை வெல்லும் முனைப்பில் இன்று தமிழ்நாடு களம் காண உள்ளது.விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் போட்டியின் 18வது தொடரின் இறுதிப் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் சாம்பியன்கள் தமிழ்நாடு-கர்நாடகா விளையாடுகின்றன. தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணியில் முரளி விஜய், பாபா அபரஜித், விஜய் சங்கர், அபினவ் முகுந்த், வாஷிங்டன் சுந்தர், ஷாருக்கான், முருகன் அஸ்வின், விக்னேஷ், சாய் கிஷோர் ஆகியோர் நன்றாக விளையாடுகின்றனர். இவர்களுடன் ரவிசந்திரன் அஸ்வினும் இணைந்துள்ளது கூடுதல் பலம். இதுவரை நடைபெற்ற 17 விஜய் ஹசாரே தொடர்களில் 5 முறை கோப்பையை வென்று அதிக முறை கோப்பையை வென்ற அணியாக தமிழ்நாடு உள்ளது.
அது மட்டுமல்ல இது வரை இறுதிப் போட்டியில் தமிழ்நாடு தோற்றதேயில்லை என்பது வரலாறு. எனவே தமிழ்நாடு 6வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பு அதிகம் உள்ளது.அதே நேரத்தில் கர்நாடக அணியியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கேப்டன் மணீஷ் பாண்டே தலைமையிலான கர்நாடக அணியில் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால், பிரசித் கிருஷ்ணா, தேவதூத் படிக்கல், அபிமன்யூ மிதுன், கவுசிக் என பேட்டிங்கில், பந்து வீச்சில் அசத்தும் வீரர்கள் உள்ளனர். விஜய் ஹசாரே தொடரில் இதுவரை 3 முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய கர்நாடகா 3முறையும் கோப்பையை வென்றுள்ளது. சொந்த மண்ணில் விளையாடுவது கர்நாடகாவுக்கு கூடுதல் பலம்.விஜய் ஹசாரே தொடரில் கடைசியாக இந்த 2 அணிகளும் மோதிய 5 போட்டிகளில் தமிழ்நாடு 3 முறையும், கர்நாடகா 2 முறையும் வென்றுள்ளன.