புதுடெல்லி: விவிஐபி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ஜாமீன் மனுத்தாக்கல் செய்துள்ள கிறிஸ்டியன் மைக்கேலின் மனுவுக்கு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை 2 வாரத்தில் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் விவிஐபிக்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்களை இத்தாலியின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டது. கடந்த 2010ம் ஆண்டு 3,600 கோடிக்கு நடைபெற்ற இந்த ஒப்பந்தத்தில், 360 கோடி ரூபாய் இந்தியர்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இந்நிலையில் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் ைமக்கேல் ஜேம்ஸ் கைது செய்யப்பட்டு கடந்த ஜனவரி 5ம் தேதி முதல் நீதிமன்ற காவலில் உள்ளார். இவர் ஜாமீன் கேட்டு சிபிஐ நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு கிறிஸ்டியன் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி அனுமல் கோத்ரா சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தங்களது பதில் மனுவை இருவாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து இந்த வழக்கு அடுத்தமாதம் 13ம் ேததிக்கு ஒத்திவைக்கப்பட்டது.