சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் 81.41 சதவீத வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66.35 சதவீதம் வாக்குகளும் பதிவாகின.
தேர்தலில், பதிவான வாக்குகள் காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய முதல், விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதியில் அதிமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தது. இந்நிலையில், விக்கிரவாண்டி தொகுதி அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 44,782 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 29,029 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி முகத்தில் உள்ளார்.
இதற்கிடையே, சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். அவருக்கு தொண்டர்கள் பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 2021 தேர்தல் வெற்றிக்கான முன்னோட்டம் இது. வாக்களித்த மக்களுக்கு மனமார்ந்த நன்றி. கூட்டணி கட்சி தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார். தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றி இது என்றும் 2 தொகுதிகளிலும் அதிமுக முன்னிலையில் உள்ளது. இது உண்மைக்கு கிடைத்த வெற்றி என்றார்.
உண்மை, தர்மம், நீதி எப்போதும் வெல்லும் என்பதற்கு இந்த வெற்றி சாட்சி என்றும் இதே கூட்டணி வரும் தேர்தலிலும் தொடரும் என்று கூறினார். எங்களால் எதை செய்ய முடியுமோ அதைத்தான் சொன்னோம், மக்களும் எங்களை நம்பினார்கள் என்றும் கூறினார்.