துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி ராஜீவ்காந்தி சாலையில் ஐடிபிஐ வங்கி சோழிங்கநல்லூர் கிளை சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு திருப்போரூரை சேர்ந்த ரவி (45) என்பவர் 10 சவரன் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சம் பணம் பெற்றுள்ளார். ஓராண்டாகியும் நகைக்கு வட்டி கட்டாமலும், நகையை மீட்காமலும் இருந்து வந்துள்ளார். அவர் கொடுத்த விலாசத்திற்கு வங்கி சார்பில் ஏல நோட்டீஸ் அனுப்பியும் அடகு வைத்த ஆசாமி வங்கியை அணுகவில்லை. இதையடுத்து அதிகாரிகள் ஏலம் விட முடிவு செய்து நகையை சோதனை செய்தனர்.
அப்போது அடகு வைத்த 10 சவரன் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகை என்று தெரிந்தது. அவரது செல்போன் நம்பரை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து போலி முகவரி கொடுத்து, போலி நகைகளை அடகு வைத்து ₹2 லட்சம் மோசடி செய்த நபர் குறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வங்கியின் மேலாளர் ஆபிரகாம் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.