×

சபரிமலையில் நடைதிறப்பின்போது பக்தர்கள் பிளாஸ்டிக் எடுத்து செல்ல வேண்டாம்

* பம்பை நதியில் துணிகளை விடக்கூடாது
* அறநிலையத்துறை ஆணையர் அறிவுரை

சென்னை: இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி  வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் இனி எந்த வகையான பிளாஸ்டிக் பொருட்களும் எடுத்து செல்ல வேண்டாம் எனவும், பம்பையில் பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விட வேண்டாம்  எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. கேரள மாநில உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வரும்போது நிலக்கல் அல்லது எருமேலி பகுதிகளுக்கு எவ்வகையான பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும். ஆகவே, வரும்  நவம்பர் 16ம் தேதி முதல் தொடங்கவுள்ள நடைதிறப்பு காலத்தின்போது ஐயப்ப பக்தர்கள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என கேரள மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் எந்த ஒரு ஐயப்ப பக்தரும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை முற்றிலுமாக தவிர்க்கும் வகையில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்தும், பம்பையில் பக்தர்கள் தாங்கள்  உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில் விடுவதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்கள் மூலம் ஐயப்ப குருசாமிகளை  ஒருங்கிணைத்து விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் அனைவரும் அனைத்து வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினை முற்றிலும் தவிர்க்குமாறும், பம்பையில் பக்தர்கள் தாங்கள் உடுத்தியுள்ள துணிகளைக் களைந்து நதியில்  விடுவதனை தவிர்க்குமாறு கேட்டுக்கோள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Devotees ,walk ,Sabarimala. Sabarimala ,pilgrims , walk , Sabarimala,pilgrims , plastic
× RELATED உடையார்பாளையத்தில் வடபத்திர காளியம்மன் வீதி உலா