சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி ஏற்படுத்தப்பட்டுள்ள சிறப்பு பேருந்து நிலையங்களுக்கு செல்லும் மக்களின் வசதிக்காக, 310 சிறப்பு இணைப்பு பஸ்களை இயக்குவதாக எம்டிசி நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை வெகுவாக குறைத்திடவும், வெளியூர் செல்லும் பயணிகள் எளிதாக பயணிக்கும் வகையில், இன்று (24.10.2019) முதல் 26ம் தேதி வரை 3 நாட்களுக்கும் வெளியூர் செல்லும் பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையம், தாம்பரம் புதிய பேருந்து நிலையம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையம், பூந்தமல்லி பேருந்து நிலையம், எம்ஜிஆர் பேருந்து நிலையம் (கோயம்பேடு), கே.கே.நகர் பேருந்து நிலையம் ஆகிய இடங்களிலிருந்து இயக்கப்படும்.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து சம்பந்தப்பட்ட ஐந்து பேருந்து நிலையங்களுக்கு மாநகரப் பேருந்துகள் ஏற்கனவே இயக்கப்பட்டு வருகின்றன. எனினும் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர் பயணிகள் மேற்குறிப்பிட்டுள்ள 5பேருந்து நிலையங்களுக்கு எளிதாக சென்று வெளிமாவட்ட நீண்ட தூர பேருந்துகளில் பயணித்திட ஏதுவாக, மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், கூடுதலாக 310 சிறப்பு இணைப்பு பேருந்துகளை இன்று (24.10.2019) முதல் 26.10.2019 வரை 3 நாட்களுக்கு 24 மணி நேரமும் இயக்கப்படுகிறது.