திருவனந்தபுரம்: வீட்டில் யானை தந்தங்களை வைத்திருந்த வழக்கில் நடிகர் மோகன்லால் உள்பட 4 பேர் டிசம்பர் 6ம் தேதி நேரில் ஆஜராக பெரும்பாவூர் நீதிமன்றம் சம்மன் அனுப்பி உள்ளது.பிரபல மலையாள நடிகர் மோகன்லாலுக்கு சொந்தமான இடங்களில் கடந்த 2011ம் ஆண்டு வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில், கொச்சி வீட்டில் இருந்து 4 யானை தந்தங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக மோகன்லால் மீதும் அவருக்கு அதை வாங்கிக் கொடுத்தவர்கள் உள்பட 4 பேர் மீதும் வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு மோகன்லாலுக்கு யானை தந்தங்களை வைத்திருக்க வனத்துறை சிறப்பு லைசென்ஸ் வழங்கியது. இதனால் அவர்கள் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் ெசய்யப்படவில்லை. இது தொடர்பாக கொச்சியை சேர்ந்த பவுலோஸ் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் மோகன்லாலுக்கு சட்டத்தை மீறி சிறப்பு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. எனவே அதை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மோகன்லாலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வனத்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த மாதம் பெரும்பாவூர் நீதிமன்றத்தில் 4 பேருக்கும் எதிராக வனச்சரக அதிகாரி தனிக்லால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இதை எதிர்த்து மோகன்லால் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த பெரும்பாவூர் நீதிமன்ற நீதிபதி, நடிகர் மோகன்லால் உள்பட 4 பேரும் டிச.6ல் ஆஜராக உத்தரவிட்டார்.