×

கட்சி நிகழ்ச்சிகளின் போது பேனர் வைக்க வேண்டாம் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம் : திமுகவை தொடர்ந்து அதிமுகவும் பிரமாண பத்திரம் தாக்கல்

சென்னை: பேனர் வைக்க மாட்டோம் என திமுக பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், அதிமுகவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதிமுக நிகழ்ச்சிகளில் பேனர் வைக்கக் கூடாது என்று நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிமுகவின் பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ இளம்பெண் உயிரிழப்பு


பள்ளிக்கரணை அருகே அதிமுக முன்னாள் கவுன்சிலர் இல்ல திருமண விழாவிற்கு செப்டம்பர் 12ம் தேதி வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் ஸ்கூட்டரில் சென்ற சுபஸ்ரீ நிலைதடுமாறி விழுந்த நிலையில், பின்னால் வந்த லாரி ஏறியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.மறுநாளே இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வில் வக்கீல்கள் லக்ஷ்மிநாராயணன், கண்ணதாசன் ஆகியோர் வைத்த முறையீட்டை விசாரித்தனர். அதனுடன் விதிமீறல் பேனர்கள் தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை விசாரித்து பேனர் வைக்க கூடாது என கட்சி தலைவர்கள் அறிவித்தால் என்ன என்று கேள்வி எழுப்பினர். இதையடுத்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பேனர் வைக்க கூடாது என அறிவிப்பு வெளியிட்டனர்.

திமுக பிரமாண பத்திரம் தாக்கல்


அவர்களின் இந்த அறிவிப்பை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய விரும்பினால் தாக்கல் செய்யலாம் என்று நீதிபதிகள் அறிவுறுத்தினர்.பின்னர் விதிமீறல் பேனரை தடுக்காத அதிகாரிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், சுபஸ்ரீ குடும்பத்துக்கு ₹5 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இதனிடேயே சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடந்த மாதம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார். அதில் விதியை மீறி கட் அவுட்டுகள், பேனர்கள் வைக்க கூடாது என்று தொண்டர்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல் மற்றும் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளதாகவும், மீறுபவர்கள் மீது கட்சி ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்

இந்நிலையில் கட்சி நிகழ்ச்சிகளின் போது அதிமுக தொண்டர்கள் பேனர் வைக்க வேண்டாம் என  நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் அதிமுக சார்பாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில்,  சுபஸ்ரீ மரணத்திற்கு பிறகு செப்டம்பர் 13ம் தேதி முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பி.எஸ்., கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் விவரங்களை குறிப்பிட்டு உள்ளனர்.  விளம்பரம் என்ற பெயரில் மக்களுக்கு இடையூறாக கட் அவுட் பேனர் வைப்பதை தொண்டர்கள் நிறுத்த வேண்டும். கட் அவுட்கள், பேனர்கள் வைப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்பதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

அதிமுக நிகழ்ச்சிகளுக்கோ, தங்கள் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ பேனர் வைக்கக்கூடாது.விளைவுகள், கட்டுப்பாடுகளை அறியாமல் சிலர் ஆர்வமிகுதியால் செய்கின்ற செயலால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் தொண்டர்கள் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளத்தை பிரமாண பத்திரத்தில் மேற்கோள்காட்டினர்.அத்துடன் சுபஸ்ரீ உயிரிழப்புக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு கோரிய அவரின் தந்தையின் மனுவுக்கு வரும் 22-ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுபஸ்ரீ குடும்பத்துக்கு கூடுதல் இழப்பீடு தொடர்பாக அவரது தந்தை ரவி மோட்டார் வாகன தீர்ப்பாயத்தை அணுகலாம் எனவும் தெரிவித்துள்ளது.


Tags : volunteers ,DMK ,party events , Subasree, AIADMK, Affidavit, Filing, Banner, High Court
× RELATED 221 கைதிகளுக்கு மதிப்பீட்டு தேர்வு