தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் நிர்வாகம், பாடம் கற்பித்தல், பயிற்சியளித்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும், டிஜிட்டல் தளத்துக்கு மாற்றப்படுகின்றன. மின்னணு ஆளுமையில், பள்ளிக் கல்வித்துறை முன்னோடியாக செயல்பட, பள்ளிக் கல்வி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி, ஸ்மார்ட் போன் வாயிலாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகைப் பதிவு, புத்தகங்களில் உள்ள பாடங்களை வீடியோவாகப் பயன்படுத்துதல் மற்றும் பாடம் தொடர்பான கூடுதல் தகவல்களைப் பதிவிறக்கம் செய்வது போன்ற திட்டங்களும், அமலுக்கு வந்துள்ளன.
அதேபோல, மாணவர்களுக்கு நவீன கற்பித்தல் முறையை வழங்க, மத்திய அரசின் சார்பில், ‘வீடியோ கான்ஃபரன்ஸ்’ மற்றும் மொபைல் போன் செயலிகள் வழியாக, சிறப்புப் பயிற்சிகளும் நடத்தப்படுகின்றன. இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளவும், டிஜிட்டல் செயல்பாடுகளை அதிகரிக்கவும், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என ஒருங்கிணைந்த கல்வி இயக்ககமான, ‘சமக்ர சிக் ஷா’ துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.