ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அவந்திப்போராவில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதில் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் காஷ்மீர் பிரிவு தளபதியும் ஒருவர் ஆவார்.
3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
காஷ்மீரின் அவந்திப்போரா மாவட்டத்தில் உள்ள ராஜபரா கிராமத்துக்கு அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக, அம்மாவட்ட காவல்துறை மூலம் பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், தீவிரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர்.அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். சற்றும் தாமதிக்காமல், பாதுகாப்புப் படையினர், கடுமையான பதிலடி கொடுத்தனர்.
இருதரப்புக்கும் இடையே, துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்தது. நீண்ட நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையின் முடிவில், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டது. மேலும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்று பகுதியில் வேறு ஏதேனும் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கிறார்களா என பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்....
அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் காஷ்மீர் பிரிவு தளபதி
இந்த தாக்குதலில் உயிரிழந்த தீவிரவாதிகள் அப்துல் ஹமீத் லேல்ஹரி, நவீத் தக் மற்றும் ஜுனைத் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் அப்துல் ஹமீத் லேல்ஹரி என்பவர் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதி ஆவார். இதற்கு முன்னதாக கடந்த் ஜூன் மாதம் அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் ஒரு பிரிவான அன்சார் காஸ்வத் அமைப்பின் தளபதியான ஜாகிர் மூசா காஷ்மீரின் டிரால் பகுதியில் சுட்டு கொல்லப்பட்டான். இதையடுத்து அந்த அமைப்பின் தளபதியாக அப்துல் ஹமீத் லேல்ஹரி நியமிக்கப்பட்டார்.