×

தீபாவளியன்று தியேட்டர்களில் சிறப்புக்காட்சிக்கு அனுமதியில்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி: தீபாவளியன்று திரையரங்குகளில் சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை என்றும், விதியை மீறி திரையிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர்  கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.  தூத்துக்குடி மாவட்டம்,  கோவில்பட்டியில்  39 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதி கட்டிடத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி:  தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி  வழங்கவில்லை. அதை மீறி சிறப்பு காட்சிகள் மற்றும் அதிக கட்டணம் வசூல்  செய்தால், திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்கள் நல்லக்கண்ணு, தா.பாண்டியன் உடல் நிலை பாதிக்கப்பட்டபோது அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற்றனர். அரசு மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்ற  காரணத்தால்தான் மூத்த தலைவர்கள் அங்கு சிகிச்சை பெற்றுள்ளனர். எனவே, இதுகுறித்து அவர்களிடம்  முத்தரசன் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.  பருவகால மாற்றத்தால் தொற்று நோய்கள் வருவது இயற்கை. இதைத் தடுக்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மக்களிடம்   விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாறாக பீதி  ஏற்படுத்தும் வகையில் அறிக்கை வெளியிடக் கூடாது என்றார்.

Tags : Kadambur Raju ,Diwali , Diwali, Exclusive and Minister Kadambur Raju
× RELATED தேர்தல் கெடுபிடியால் ஆட்டம் கண்ட...