சென்னை: சர்ச் அறையில் பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வியாசர்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் மெயின் ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு, பெரும்புதூர் பன்னூர் கிராமத்தை சேர்ந்த மார்ட்டின் சவுரியப்பன் (37) பாதிரியாராக இருந்து வந்தார். சர்ச்சில் உள்ள அறையில் தங்கி சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பும் படித்து வந்துள்ளார்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சர்ச் அறையில் மார்ட்டின் சவுரியப்பன் தூங்கியுள்ளார். நேற்று காலை சர்ச்சில் நடந்த ஜெபத்தில் மார்ட்டின் கலந்துகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த சக பாதிரியார்கள் மார்ட்டின் அறைக்கு சென்று பார்த்தபோது, கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. இதனால் வேறு சாவி மூலம் அறையை திறந்து பார்த்தனர். அப்போது, மின்விசிறி கொக்கியில் மார்ட்டின் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து வியாசர்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், பாதிரியார் மார்ட்டின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது, கடந்த ஒரு வாரமாக மார்ட்டின் யாரிடமும் சகஜமாக பேசாமல் மனமுடைந்து இருந்தது தெரியவந்தது.