டெல்லி: தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 16ம் தேதி தொடங்கிய நிலையில், பெரும்பாலான மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் கடுமையான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வானிலை மையம் தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தென்மேற்கு- மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது வடதமிழகம்-தெற்கு ஆந்திராவையொட்டிய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம், ஆந்திரா, புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே அரபிக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்று ஒமனை நோக்கி செல்ல வாய்ப்பு உள்ளது என கூறியுள்ளது மேலும் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.