சென்னை: கனமழை காரணமாக சில மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழையுடன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையானது அடுத்த மூன்று தினங்களுக்கு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
அவ்வப்போது பலத்த மழை, சாரல் மழை பெய்வதால் பகல் நேரத்திலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதுடன், நிலத்தடி நீரும் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு திருவள்ளூர், திருவண்ணாமலை, கோவை, தேனி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதனிடையே பல்வேறு பகுதிகளில் காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
* கனமழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு
* சென்னையில் வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
* கோவை மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
* திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் வழக்கம் போல் இன்று செயல்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு