×

162 ரன்னில் சுருண்டு பாலோ ஆன் 2வது இன்னிங்சிலும் தென் ஆப்ரிக்கா திணறல்: இந்தியா வெற்றி உறுதி

ராஞ்சி: இந்திய அணியுடனான 3வது டெஸ்டின் முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா, 2வது இன்னிங்சிலும் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
ஜார்க்கண்ட் மாநில கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. ரோகித் ஷர்மா 212, அஜிங்க்யா ரகானே 115, ஜடேஜா 51, சாஹா 24, உமேஷ் 31 ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணி 2ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 9 ரன் எடுத்திருந்தது. ஜுபேர் ஹம்சா (0), கேப்டன் டு பிளெஸ்ஸி 1 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். டு பிளெஸ்ஸி மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் உமேஷ் வேகத்தில் கிளீன் போல்டானார். ஹம்சா - தெம்பா பவுமா இணை 4வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 91 ரன் சேர்த்தது.

ஹம்சா 62 ரன் (79 பந்து, 10 பவுண்டரி, 1 சிக்சர்), பவுமா 32 ரன் (72 பந்து, 5 பவுண்டரி) எடுத்து பெவிலியன் திரும்பினர். ஓரளவு தாக்குப்பிடித்த ஜார்ஜ் லிண்டே 37 ரன் (81 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுக்க, மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தனர். தென் ஆப்ரிக்கா முதல் இன்னிங்சில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (56.2 ஓவர்). என்ஜிடி (0) ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய பந்துவீச்சில் உமேஷ் 3, ஷமி, நதீம், ஜடேஜா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 335 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. டி காக் 5 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் ஸ்டம்புகள் சிதற வெளியேறினார். ஜுபேர் ஹம்சா (0), கேப்டன் டு பிளெஸ்ஸி (4), பவுமா (0) ஆகியோர் ஷமி வேகத்தில் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா 8.3 ஓவரில் 22 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

எல்கர் காயம்: ஒரு முனையில் உறுதியுடன் போராடிய தொடக்க வீரர் டீன் எல்கர் 16 ரன் எடுத்திருந்த நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 10வது ஓவரின் 3வது பந்து அவரது ஹெல்மெட்டின் வலது பக்கமாக பலமாகத் தாக்கியது. பவுன்சரின் வேகத்தை தாங்க முடியாமல் நிலைகுலைந்த எல்கர் களத்திலேயே சரிந்தார். உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அவருக்கு பதிலாக கிளாசனுடன் ஜார்ஜ் லிண்டே இணைந்தார். கிளாசன் 5 ரன் எடுத்து உமேஷ் வேகத்தில் எல்பிடபுள்யு முறையில் ஆட்டமிழக்க, தென் ஆப்ரிக்கா 16.1 ஓவரில் 36 ரன்னுக்கு 5 விக்கெட் இழந்து தவித்தது. லிண்டே - பியட் ஜோடி 6வது விக்கெட்டுக்கு 31 ரன் சேர்த்தது. லிண்டே 27 ரன் எடுத்து ரன் அவுட்டாக, பியட் 23 ரன் எடுத்து ஜடேஜா சுழலில் கிளீன் போல்டானார். ‘மூளை அதிர்ச்சி’யால் ஓய்வு பெற்ற எல்கருக்கு மாற்று வீரராக டி புருயின் களமிறங்கினார்.

இந்திய அணி விக்கெட் கீப்பர் சாஹாவுக்கு விரலில் காயம் ஏற்பட்டதால் அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் கீப்பிங் செய்தது குறிப்பிடத்தக்கது. ரபாடா 12 ரன் எடுத்து அஷ்வின் பந்துவீச்சில் ஜடேஜா வசம் பிடிபட்டார். தென் ஆப்ரிக்கா 2வது இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 132 ரன் எடுத்திருந்த நிலையில் (46 ஓவர்) 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. டி புருயின் 30 ரன் (42 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்), நோர்ட்ஜே 5 ரன்னுடன் களத்தில் உள்ளனர். இந்திய பந்துவீச்சில் ஷமி 3, உமேஷ் 2, ஜடேஜா, அஷ்வின் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். கை வசம் 2 விக்கெட் இருக்க, தென் ஆப்ரிக்கா இன்னும் 203 ரன் பின்தங்கியுள்ளதால் இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன் ஒயிட்வாஷ் செய்வது உறுதியாகிவிட்ட நிலையில் இன்று 4வது ஆட்டம் நடைபெறுகிறது.

Tags : South Africa ,innings , South Africa, India
× RELATED தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்த பெண் சிவிங்கி புலி 5 குட்டிகளை ஈன்றது