×

ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோயில் சிலையை உடைத்ததை கண்டித்து சாலை மறியல்: போலீஸ் குவிப்பு

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கோயில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததை தொடர்ந்து நேற்று கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டத்தில் பொது மக்கள் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தொப்பம்பாளையத்தில் கூரைகாளியண்ணன், விளையகாளியண்ணன் கோயில் உள்ளது. இந்த கோயில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டு 2 புதிய சிலைகள் வைக்கப்பட்டன. ேகாயிலில், புதிய சிலைகளை  வைக்கக்கூடாது என ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் கோயிலின் கிரில் கேட்டை உடைத்து புகுந்து, 2 சிலைகளையும் உடைத்து கீழே தள்ளி சேதப்படுத்திவிட்டு தப்பினர். இது குறித்து தகவலறிந்த மற்றொரு தரப்பினர்  ஒன்று கூடி, சாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து சிவகிரி நகரம் முழுவதும் கடையடைப்பு மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஈரோடு மாவட்ட எஸ்.பி. சக்தி கணேசன் தலைமையில் சிவகிரியில் நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு  பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஈரோடு ஆர்.டி.ஓ. முருகேசன், கொடுமுடி தாசில்தார் சிவசங்கர் மற்றும் போலீசார் கோயில் சிலைகள் உடைக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : district ,Sivagiri ,Erode , Sivagiri, Erode , Police mobilize,demolish ,statue
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்