சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கான காப்பீட்டு தொகை எங்கே என்று ஜி.கே.வாசன் கேள்வி எழுப்பி உள்ளார். தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவாரூர், நாகை, தஞ்சை மாவட்ட விவசாயிகள் பெரும்பாலானோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர் காப்பீட்டுத் தொகையை அதிகரித்து தருமாறு டெல்டா மாவட்ட விவசாயிகள் போராடி வருகின்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீளமுடியாமல் தவிக்கும் அவர்களுக்கு தரவேண்டிய காப்பீட்டுத் தொகையை கூட, அவர்கள் ஏற்கனவே வாங்கியிருந்த கடனுக்காக பிடித்தம் செய்கின்றனர். இது விவசாயிகளை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது. ஆகவே, தமிழக அரசின் வேளாண்மைத்துறை விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி அவற்றை முழுமையாக, உடனடியாக, அனைவருக்கும் கிடைக்க தமிழக அரசு உதவ வேண்டும்.