புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடக்கும் என மத்திய அரசின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நாடாளுமன்ற விவகார அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நவம்பர் 3ம் வாரத்தில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது. ஆனால் தேதிகள் எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ம் தேதி தொடங்கி டிசம்பர் 13ம் தேதி வரை நடத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. இக்கூட்டத்தொடரில், 2 முக்கிய அவசர சட்டங்கள், நிரந்தர சட்டமாக்கப்பட உள்ளன.
பொருளாதார மந்தநிலையை சரிசெய்ய நிறுவனங்களுக்கான வரியை மத்திய அரசு குறைத்து, சமீபத்தில் அவசர சட்டம் இயற்றியது. இதேபோல, இ-சிகரெட் விற்பனைக்கும், தயாரிப்புக்கும் தடை விதிக்கப்பட்டது. இவ்விரு அவசர சட்டங்களுக்கான மசோதா குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட உள்ளது.கடந்த 2 ஆண்டுகளாக குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 21ம் தேதி தொடங்கி ஜனவரி முதல் வாரத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.