சென்னை: கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடுகள் கட்டி, அதற்கான சாவிகளை நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். கஜா புயலால் வீடுகள் இழந்தோருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என ரஜினிகாந்த் அறிவித்து இருந்தார். அதன்படி வீடுகள் கட்டும் பணி நடந்தது. இதற்காக ரூ.18 லட்சம் செலவில் 10 வீடுகள் கட்டப்பட்டன. கோடியக்கரையில் 4 வீடுகளும் தலைஞாயிறுவில் 6 வீடுகளும் கட்டப்பட்டன. பாதிக்கப்பட்டோர், சென்னை போயஸ் கார்டனிலுள்ள ரஜினி வீட்டுக்கு நேற்று வந்தனர். அப்போது அவர்களுக்கு வீடுகளுக்கான சாவியை ரஜினி வழங்கினார். அவர்கள் ரஜினிக்கு நன்றி தெரிவித்தனர். அப்போது, மக்கள் மன்ற நிர்வாகிகள் உடனிருந்தனர்.