×

நாங்குநேரி, விக்கரவாண்டி இடைத்தேர்தல்: காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு நிறைவு: சீல் வைக்கும் பணி தீவிரம்

நாங்குநேரி: நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் வசந்தகுமார், மக்களவை தேர்தலில்  கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆனார். இதனால், நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியானது. இதேபோல, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜுன் மாதம்  உடல்நலக்குறைவால் காலமானர். இதனால், இந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இரண்டு தொகுதிகளுக்கும் அக்டோபர் 21-ம் தேதி இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் 24-ம் தேதி வாக்கு  எண்ணிக்கை நடைபெறும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதன்படி, நாங்குநேரி மற்றும் விக்கரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்றது. சில இடங்களில், கொட்டு மழைக்கு இடையிலும், வாக்காளர்கள் ஆர்வத்துடன் வந்திருந்து வாக்களித்தனர்.  பிற்பகல் 5 மணி நிலவரப்படி, நாங்குநேரியில் 62.59 விழுக்காடு வாக்குகளும், விக்கரவாண்டியில், 76.41 விழுக்காடு வாக்குகளும் பதிவாகியுள்ளன. காலை 7 மணிக்கு துவங்கி அமைதியாக, வன்முறை ஏதும் இல்லாமல் நடைபெற்ற வாக்குப்பதிவு  6 மணியுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். வரும் 24-ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. அன்றைய தினம் இரு தொகுதியில் வெற்றி வேட்பாளர்கள் பெயர் தெரியவரும்.

நாங்குநேரி தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் உள்பட 23 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.  விக்கிரவாண்டி தொகுதியில், திமுக வேட்பாளர் புகழேந்தி, அதிமுக  வேட்பாளர் முத்துச்செல்வன் உள்பட 8 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

மகாராஷ்டிரா, ஹரியானாவில் வாக்குப்பதிவு மந்தம்:

இதைபோல், மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கும், ஹரியானாவில் 90 தொகுதிகளுக்கும் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. புதுச்சேரி, தெலுங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 18 மாநிலங்களில் காலியாக உள்ள 51 சட்டசபை  தொகுதிகள் மற்றும் 2 லோக்சபா தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் மழை பெய்த போதிலும் பொருட்படுத்தாமல் மக்கள் ஆர்வத்துடன் ஓட்டளித்தனர். மாலை 5 மணி நிலவரப்படி விக்கிரவாண்டியில் 76.41 சதவீதமும் , நாங்குநேரியில் 62.32 சதவீதமும்  ஓட்டுக்கள் பதிவாகி இருந்தன. இடைத்தேர்தல் என்ற போதிலும், ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு முன்பே ஓட்டுச்சாவடிக்கு சென்ற மக்கள் நீண்ட வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.

ஆனால், சட்டசபை தேர்தல் நடைபெறும், மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் மிக மந்தமாகவே ஓட்டுப்பதிவு நடைபெற்றது. மாலை 5 மணி நிலவரப்படி ஹரியானாவில் 53.04 சதவீதமும், மகாராஷ்டிராவில் 44.32 சதவீதமுமே ஓட்டுக்கள்  பதிவாகின. இவ்விரு மாநிலங்களிலும் காங் - பா.ஜ., இடையே நேரடி போட்டி உள்ளதாலும், லோக்சபாவிற்கு பிறகு நடக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்பதாலும் முக்கியமானதாக இவ்விரு சட்டசபை தேர்தல்களும் பார்க்கப்படுகிறது.


Tags : Voting ,Vikravandi ,Nanguneri , Nanguneri, Vikravandi by-election: Voting completed at 7 am
× RELATED நாடாளுமன்ற கடைசி கட்ட தேர்தலுடன்...