×

வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் ஆமை வேகத்தில் நடந்துவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள்: கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை, தெருக்களில் தேங்கும் அவலம்

சென்னை: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இதனால், கால்வாய்களில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் சாலை, தெருக்களில் தேங்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி, டிசம்பர் 31ம் தேதி வரை மழை பொழிவு இருப்பது வழக்கம். இந்த பருவமழையையொட்டி அடையாறு, பக்கிங்காம் கால்வாய், கூவம், கொசஸ்தலையாற்று படுகைகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் செல்ல வசதியாக வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளை செப்டம்பர் முதல்வாரத்தில் தொடங்கியிருக்க வேண்டும். அப்போது, தான் மழை காலங்களில் கால்வாய் வழியாக எளிதில் மழை நீர் கடலுக்கு செல்ல ஏதுவாக இருக்கும். ஆனால், இந்தாண்டு கடந்த செப்டம்பர் 13ம் தேதி தான் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு ரூ.7.65 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. அதன்படி, சென்னை மண்டலத்தில் கீழ்பாலாறு கோட்டத்தில் 9 பணிக்கு ரூ.1.85 கோடி, கொசஸ்தலையாறு கோட்டத்தில் 10 பணிக்கு ரூ.1.78 கோடி, ஆரணியாறு கோட்ட வடிலத்தில் 10 பணிக்கு ரூ.1.76 கோடி, கிருஷ்ணா நீர் விநியோக திட்டகோட்டத்தில் 6 பணிக்கு ரூ.24 லட்சம், வெள்ளாறு கோட்டத்தில் 6 பணிக்கு ரூ.47 லட்சம், சிதம்பரம் கொள்ளிடம் கோட்டத்தில் 10 பணிக்கு ரூ.1.55 கோடி என மொத்தம் 51 பணிக்கு ரூ.7.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


இதை தொடர்ந்து பொதுப்பணித்துறை சார்பில் பருவமழை தூர்வாரும் பணிக்கு குறுகிய கால டெண்டர் விட்டு, ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்தது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனம் சார்பில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் பணிகளை தொடங்கியது. இந்த பணிகளை மேற்கொள்ளும் வகையில் ஒப்பந்த நிறுவனங்களிடம் மிதவை இயந்திரம், ஜேசிபி இயந்திரம் வைத்திருக்க வேண்டும். ஆனால், தற்போது டெண்டர் எடுத்த ஒரு சில ஒப்பந்த நிறுவனங்களிடம் மிதவை இயந்திரம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், கால்வாய்களில் ஆகாயத்தாமரைகளை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. இருப்பினும் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் ஒரு சில இடங்களில் கால்வாய்களில் படர்ந்திருந்த ஆகாயத்தாமரை மற்றும் செடி, கொடிகள் அகற்றப்பட்டது. தற்போது வரை 60 சதவீத பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. இதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகளின் அலட்சியமும் முக்கிய காரணம் எனக்கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் முதல் வாரத்தில் பணிகளை தொடங்கினால் மட்டுமே மழைக்கு முன்னதாக முன்னெச்சரிக்கை பணிகளை முடித்து இருக்க முடியும். ஆனால், நிதி பெற்று பணிகளை தொடங்க ஏற்பட்ட தாமதமே இந்த பிரச்சனைக்கு காரணம் எனக்கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 17ம் தேதி பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தற்போது வரை கால்வாய்களை தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிவடையாத நிலையில், அந்த பகுதிகளில் தண்ணீர் செல்ல வழியில்லாத நிலை ஏற்பட்டது. இதனால், கால்வாய்களில் இருந்து வெளியேறிய மழை நீர் சாலைகளில், தேங்கி குட்டை போல் காட்சியளித்து வருகிறது. இந்த நிலையில் மழை முன்னெச்சரிக்கை பணிகளை சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அசோகன் வேகப்படுத்த ஒப்பந்த நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், தகுதியான ஒப்பந்த நிறுவனங்களை தேர்வு செய்யாததன் விளைவாக மிதவை இயந்திரம் இல்லாமல் தண்ணீரை வெளியேற்றுவது கடினம் என்பதால் தற்போது பருவமழை முன்னெச்சரிக்கை பணிக்கு போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தகுதியான ஒப்பந்த நிறுவனத்திடம் இந்த பணிகளை ஒப்படைக்கவும் பொறியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : roadways ,streets ,monsoon ,Northeast , Northeast monsoon, precautionary measures, tasks, stagnation
× RELATED சென்னையில் நாளை திறந்த வெளி வேனில்...