×

வலங்கைமான் பகுதியில் மின்கம்பியில் உரசும் சாலையோர மரக்கிளைகள் அகற்றம்: மின்வாரியம் நடவடிக்கை

வலங்கைமான்: தினகரன் செய்தி எதிரொலியாக வலங்கைமான் பகுதியில் மின்கம்பியில் உரசும் சாலையோர மரக்கிளைகளை மின்வாரிய ஊழியர்கள் அகற்றினர். வலங்கைமான் பேரூராட்சிப்பகுதியில் கடைத்தெரு, எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல இடங்களில் மின்கம்பங்கள் மிகவும் பழுதடைந்து காணப்படுகின்றது. அதேபோல் சில இடங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றது. இவைகளை சரிசெய்ய பலமுறை கோரிக்கை விடுத்தும் மின்வாரியம் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகின்றது.

இந்நிலையில் வலங்கைமான் பேரூராட்சிப்பகுதியில் மணவெளித்தெரு சுடுகாடு வழிநடப்பு பகுதியில் சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு அதன் மூலம் மும்முனை மின்சாரம் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த மின்கம்பிகள் மூலம் ரைஸ் மில், மரம் அறுக்கும் மில் மற்றும் இருநூறுக்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு மின்சாரம் செல்கின்றது. இவ்வழித்தடத்தில் பள்ளிக்கூடம் அருகே மின்கம்பிகள் மீது அடர்ந்த மரங்கள் உரசிக்கொண்டு உள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றது. மேலும் சில நேரங்களில் மின்கம்பிகளில் இருந்து தீப்பொறிகள் கொட்டுவதால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்துடனே வசிக்கின்றனர்.

மேலும் மின்கம்பிகள் ஒன்றோடு ஒன்று உரசும்போது உயர்மின் அத்த மின்சாரம் வருமோ எனவும் அச்சமடைகின்றன. எனவே வலங்கைமான் மின்சார வாரியம் மேலும் காலதாமதம் செய்யாமல் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன் மின்கம்பிகளின் மீது அடர்ந்து காணப்படும் மரங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பான செய்தி கடந்த 16ம் தேதி தினகரனில் படத்துடன் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் சாலையோர மரங்களில் மின்கம்பி உரசி தீப்பொறி ஏற்படுவதால் மக்கள் அச்சம் என செய்தி வெளியானது. இதையடுத்து நேற்று மின்பராமரிப்பு பணிக்கென மின் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில் மின்வாரிய பணியாளர்கள் மின்கம்பியில் உரசும் மரக்கிளைகளை அகற்றினர்.

Tags : Removal ,area ,Walangaman , Walangaman area, wiring, roadside, timber, removal, electricity, operation
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...