சாயல்குடி: தேவர் குருபூஜை விழாவுக்கு அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று கருணாஸ் எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா மற்றும் ஜெயந்தி விழா அக்.28,29 மற்றும் 30ம் தேதிகளில் நடக்க உள்ளது. நேற்று பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு வந்த திருவாடானை எம்எல்ஏ கருணாஸ் மரியாதை செலுத்தி விட்டு, மாலை அணிந்து விரதத்தை துவக்கினார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நாட்டின் விடுதலைக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை சென்றவர். இவரது ஜெயந்தி நாளை தமிழக அரசு ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடி வருகிறது. பல லட்சங்கள் செலவழித்து பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறது.
இந்நிலையில் தமிழக அரசு அக்.30ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிட வேண்டும். ராமநாதபுரம் மாவட்டத்திற்காவது அரசு விடுமுறை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று மாவட்டத்தில் 144 தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் போட்டியிட, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரிடம் கலந்து ஆலோசித்து முக்குலத்தோர் புலிப்படை போட்டியிடும்’’ என்றார்.