×

நாளை தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி, புதுச்சேரியில் காமராஜ்நகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு வருகிற 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நாங்குநேரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன், தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்தமிழ் செல்வன், தி.மு.க. வேட்பாளர் புகழேந்தி உள்ளிட்ட 8 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரு தொகுதிகளிலும் கடந்த 2 வாரங்களாக அனல்பறக்கும் பிரசாரம் நடைபெற்று வந்தது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர். அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக இறுதிக்கட்டமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் விக்கிரவாண்டியில் பிரச்சாரம் செய்தார். விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட திருவாமாத்தூர் உள்ளிட்ட பகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் இறுதி கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதியில் முதலமைச்சர் நாராயணசாமி, என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஆகியோர் இறுதிகட்ட பிரசாரம் செய்தனர்.

நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்ததை அடுத்து, வாக்குப்பதிவுக்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர். நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச் சாவடிகளில் 1,400 பேர் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபட உள்ளனர். பாதுகாப்புக்காக 800 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர், 3 கம்பெனி தமிழ்நாடு சிறப்பு படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் 225 வாக்குச் சாவடிகளில் 1,331 பேர் தேர்தல் பணிகளில் ஈடுபட உள்ளனர். 1,000 போலீசார், 3 கம்பெனி துணைநிலை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட உள்ளனர். பதற்றமான ஓட்டுச்சாவடிகள் என கருதப்படும் இடங்களில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட உள்ளனர்.

இரு தொகுதிகளிலும் நாளை வாக்குப்பதிவு நடைபெறுவதையொட்டி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதுடன், ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்குமாறு தொழிற்சாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் பதட்டமானதாக கருதப்படும் 61 வாக்குச்சாவடிகளில் ஆய்வாளர் தலைமையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி ஜனநாயக கடமையாற்றலாம் என கடலூர் எஸ்.பி.ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார்.

Tags : polling booths ,polls , Election, picnic, polling, analyst, defense
× RELATED பழநியில் திமுக கூட்டணியினரின் தேர்தல் பணிகளை எம்எல்ஏ ஆய்வு