×

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு விவகாரத்தில் பரபரப்பு: ப.சிதம்பரத்துக்கு ரூ35 கோடி லஞ்சம்... சிபிஐ குற்றப்பத்திரிகையில் தகவல்

புதுடெல்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு தடையில்லா சான்றிதழ் பெறுவதற்காக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு ரூ.35 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக சுமார் ரூ305 கோடி பணம் பெற்றதாகவும், இது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் தரப்பில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்காத காரணத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் சுமார் 24 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார். இந்நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அமலாக்கத்துறை தரப்பில் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிபிஐ நீதிமன்றம் அவருக்கு 7 நாள் காவல் வழங்கி கடந்த 18ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து அவர் வரும் 24ம் தேதி பிற்பகல் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்து இன்றோடு 60 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ நேற்று முன்தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. அதில்,” ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி, ஆடிட்டர் பாஸ்கரராமன், நிதி ஆயோக் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சிந்துஸ்ரீ குல்லர், குறு, சிறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் முன்னாள் செயலாளர் அனுப் கே.புஜாரி, பிரபோத் சக்ஸ்சேனா உட்பட மொத்தம் 14 பேர்களின் பெயர்கள்  இடம்பெற்றுள்ளது. இதில் இந்திராணி முகர்ஜியை பொருத்தமட்டில் அப்ரூவராக மாறிவிட்டதால் அவர் அரசு தரப்பு சாட்சியமாக கருதப்படுவார். இதையடுத்து குற்றப்பத்திரிக்கை தொடர்பான வழக்கு நாளை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் அமர்வில் விசாரிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த நிலையில் சிபிஐ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கை தொடர்பாக தற்போது புதிதாக பரபரப்பு  தகவல் வெளியாகியுள்ளது. அதில்,” ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதற்காக மொரிசீயஸ், பெர்முடா, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் சுவட்சர்லாந்து ஆகிய வெளிநாடுகளில் இருந்து ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவருக்கும் 5 மில்லியன் அமெரிக்க டாலர் அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் ரூ.35 கோடி கையூட்டு தொகையாக கொடுக்கப்பட்டது. இதில் அவர்ளுக்கான அதிகாரம் மற்றும் செல்வாக்கை பயன்படுத்தி வழக்கில் இருந்து தப்பித்து வந்தனர் என அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி சிபிஐ விசாரணையின் போது வாக்கு மூலத்தில் தெரிவித்ததாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதைத்தவிர அவர் உடல் ரீதியாக சில துன்பங்களையும் இந்த விவகாரத்தின் போது அனுபவித்தேன் என கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வழக்கில் துணை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் சிபிஐ தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

விரைவில் கார்த்தி கைது?
கடந்த 2007ம் ஆண்டு மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்திற்கு விதி முறைகளை மீறி சுமார் ₹3,500 கோடி முதலீடு செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஆனால் இதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் பதிலளிக்குமாறு மேற்கண்ட இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஒருவேளை முன்ஜாமீனுக்கு தடை விதிக்கும் பட்சத்தில் கார்த்தி சிதம்பரமும் உடனடியாக கைது செய்யப்படுவார் எனத் தெரிகிறது.

Tags : CBI , INX, P Chidambaram, CBI charge sheet
× RELATED நூஹ் பலாத்கார வழக்கு 4...