×

சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்யும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் கால்வாய் கட்ட முடியாது என்பதா?: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் கால்வாய் கட்ட முடியாது என்று சொன்ன தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை தாலுகாவில் உள்ள ராவணபுரம், செல்லப்பம்பாளையம் உள்பட ஆறுகிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள் பாலாறு, நல்லாறு ஆகிய ஆறுகள் மூலம் பாசனவசதி பெற்று வந்தன.பாலாறின் குறுக்கே திருமூர்த்தி அணைகட்டப்பட்ட பின், அதற்கு தண்ணீர் கொண்டு செல்வதற்காக, 1968ம் ஆண்டு, 49 கி.மீ. தூரத்திற்கு கால்வாய் அமைத்து நல்லாறு ஆற்றின் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.  இதனால் தங்களுக்கு வரவேண்டிய தண்ணீர் கிடைக்காமல், விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாவதாகவும் கூறி, நல்லாறு பாலாறு பாசன படுகை விவசாயிகள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

நல்லாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள காண்டூர் கால்வாயில் இருந்து, நல்லாறுவுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வகையில் சுரங்கக்கால்வாய் அல்லது மேல்மட்ட கால்வாய் கட்ட உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.  இந்த மனுவுக்கு பதிலளித்த தமிழக அரசு, தொழில்நுட்ப ரீதியில் இந்த கால்வாய் கட்டுவது சாத்தியமில்லாதது எனத் தெரிவித்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், சாலை வசதி, போக்குவரத்து வசதி இல்லாத காலத்தில் பல அணைகள் கட்டப்பட்டுள்ளது. தற்போது சூரியனையும், சந்திரனையும் ஆய்வு செய்ய ராக்கெட் அனுப்பும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்துள்ள நிலையில், மனுதாரர்களின் உண்மையான பிரச்னையை புரிந்து கொள்ளாமல் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமற்றது என அரசு பதிலளித்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மனுதாரர்களின் கோரிக்கை நியாயமாக இருப்பதால், மூன்று மாதங்களில், காண்டூர் கால்வாய் குறுக்கே சுரங்க கால்வாய் அல்லது மேல்மட்ட கால்வாயை கட்ட வேண்டும் என, நீதிபதி கல்யாண சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.


Tags : canal ,Tamil Nadu ,government ,High Court ,Solar ,Can't Build Canal Technology: High Court , Can't build , technology ,solar and moon study, High Court condemns, Tamil Nadu government
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...