சென்னை: அத்திகடவு அவினாசி திட்டத்துக்காக 3 கோட்டங்கள் உருவாக்கம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் உள்ள வறண்ட பகுதிகளுக்கு நீர்ப்பாசனம் அளிக்கவும், நிலத்தடி நீர் செறிவூட்டுதல் மற்றும் குடிநீர் வழங்கும் வகையில் ₹1,652 கோடி செலவில் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. தொடர்ந்து ஒப்பந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு கடந்த பிப்ரவரி 28ம் தேதி முதல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இத்திட்டத்தின் மூலம் 32 பொதுப்பணித்துறை ஏரிகள், 42 ஊராட்சி ஒன்றிய குளங்கள், 971 கசிவு நீர் குட்டைகள் ஆகியவற்றின் 24,468 ஏக்கர் பாசன பரப்பு பயன்பெறுகிறது. தற்போது இந்த திட்டப்பணிகள் நடந்து வரும் நிலையில், இன்னும் வேகமாக செயல்படுத்துவதற்காக புதிதாக 3 கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, நீர்வளப்பிரிவு திட்டம் மற்றும் வடிவமைப்பு கட்டுபாட்டில் உள்ள சிறப்பு திட்ட வட்டம் மற்றும் அவினாசி, சிறப்பு திட்ட கோட்டம் பெருந்துறை, சிறப்பு திட்ட கோட்டம் அவினாசி ஆகியவை ஏற்படுத்தப்பட்டு, தற்போது கோவை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலக கட்டுபாட்டில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த திட்டப்பணிகளை வேகமாக செயல்படுத்துவது மட்டுமின்றி தலைமை பொறியாளர் இந்த திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடியும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.