×

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் பிரசாரம் ஓய்ந்தது நாளை வாக்குப்பதிவு

* துணை ராணுவப்படை, போலீசார் தீவிர பாதுகாப்பு
* 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை

சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அனைத்து மையங்களிலும் துணை ராணுவம், போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வருகிற 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிகளில் கடந்த சில நாட்களாக நடைபெற்ற தலைவர்களின் அனல் பறக்கும் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து நாளை (21ம் தேதி) காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும். தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு முடியும். அதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து, தயார் நிலையில் வைத்துள்ளது.விக்கிரவாண்டி தொகுதியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர். நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர். இரண்டு தொகுதியிலும் கடந்த சில நாட்களாக தேர்தல் பிரசாரம் அனல் பறந்தது. இரண்டு தொகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அனைத்து கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளருக்கும், நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளருக்கும் ஆதரவாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்  கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர்  தொல்.திருமாவளவன் எம்பி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகைதீன், மமகதலைவர் ஜவாஹிருல்லா மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து  முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், தேமுதிக பொருளாளர்  பிரேமலதா, நடிகர் சரத்குமார் மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள்  பிரசாரம் செய்தனர். விக்கிரவாண்டியில் திமுக, அதிமுக வேட்பாளர்களும்,  நாங்குநேரியில் காங்கிரஸ் - அதிமுக வேட்பாளர்களும் மற்றும் கட்சி  தலைவர்களும் நேற்று இறுதிக்கட்ட தீவிர வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டனர்.
இந்த இரு தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாங்குநேரியில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 389 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 29 ஆயிரத்து 748 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தினர் 3 பேர் என மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 42 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிக்க 170 இடங்களில் மொத்தம் 299 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் 110 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விக்கிரவாண்டியில் 1,11,721 ஆண் வாக்காளர்கள், 1,11,710 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 25 பேர் என மொத்தம் 2,23,456 பேர் வாக்களிக்க 275 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 50 மையங்கள் பதற்றமானவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.நாங்குநேரியில் 23 வேட்பாளர்கள் போட்டியிடுவதால் 2 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி 299 வாக்குச்சாவடிகளில் 598 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும். விக்கிரவாண்டி தொகுதியில் 3,286 பேர், நாங்குநேரியில் 1,475 பேர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நேற்று மாலை 6 மணியோடு பிரசாரம் ஓய்ந்ததால் நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இருக்கும் வெளியூர் நபர்கள் அனைவரும் வெளியேற வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அங்கு பொதுக்கூட்டங்கள், பிரசாரம், ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ், இணையதளம் மூலமாகவும் பிரசாரம் செய்யக்கூடாது. இதை மீறினால் 2 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இரண்டு தொகுதியிலும் 6 கம்பெனி துணை ராணுவ படையினர் மற்றும் போலீசார் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு தொகுதியில் மொத்தமுள்ள 574 வாக்குச்சாவடி மையங்களிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை பதிவாகும் வாக்குகள் அனைத்தையும் வெப்கேமரா மற்றும் வீடியோ கேமரா மூலம் பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நாளை பதிவாகும் வாக்குகள், மாலை சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து வருகிற 24ம் தேதி (வியாழன்) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். வாக்கு எண்ணிக்கை தொடங்கி ஒரு மணி நேரத்தில் முன்னணி நிலவரம் தெரியவரும்.இடைத்தேர்தலை முன்னிட்டு நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் நேற்று முதல் வாக்குப்பதிவு நாளான 21ம் தேதி நள்ளிரவு 12 மணி வரையிலும், வாக்கு எண்ணிக்கை தினமான 24ம் தேதியும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரி: புதுச்சேரி, காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், என்ஆர் காங்கிரஸ் கட்சி உள்பட 9 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பைக் பேரணியாக சென்று முதல்வர் நாராயணசாமி நேற்று தீவிர ஓட்டு வேட்டையாடினார். இதேபோல் என்ஆர் காங்கிரசார் ரங்கசாமி தலைமையில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் நேற்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

* விக்கிரவாண்டியில் திமுக சார்பில் நா.புகழேந்தி, அதிமுக சார்பில் முத்தமிழ்செல்வன், நாம் தமிழர் கட்சி கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் களத்தில் உள்ளனர்.
* நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன், அதிமுக சார்பில் நாராயணன், நாம் தமிழர் கட்சி ராஜநாராயணன் உள்ளிட்ட 23 பேர் களத்தில் உள்ளனர்.

Tags : ballot. Voting ,Vikravandi , Voting, Nankuneri, Vikravandi,ended,tomorrow's ballot
× RELATED பஸ்சில் கஞ்சா கடத்தி வந்த 3 வாலிபர்கள் கைது: 3 கிலோ பறிமுதல்