×

திருமங்கலம் அருகே பரபரப்பு நான்குவழிச்சாலையில் கார் தீப்பற்றி எரிந்தது

*தாவிக்குதித்து உயிர்தப்பிய தம்பதி

திருமங்கலம் :திருமங்கலம் அருகே பரபரப்பான நான்குவழிச்சாலையில் கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி மாவட்டம், சின்னமனூரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (50). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி சாருமதி (45). இருவரும் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்காக மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்திற்கு காரில் நேற்று வந்தனர். திருமங்கலம் அருகே கூத்தியார்குண்டு பகுதியில் நான்கு வழிச்சாலையில் சென்றபோது வெங்கடேஸ்வரனுக்கு வழி தெரியாததால் காரை நிறுத்தி, அங்கிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஜெயராமனிடம் திருப்பரங்குன்றத்திற்கு வழி கேட்டுள்ளார்.

 அப்போது திடீரென காருக்குள் தீப்பிடித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கடேஸ்வரன், சாருமதி இருவரும் அலறியடித்து காரிலிருந்து வெளியேறி, உயிர்தப்பினர். பெட்ரோல் கசிவால் தீப்பிடித்த கார் மளமளவென் பற்றி எரியத் துவங்கியது. போக்குவரத்து அதிகமுள்ள நான்குவழிச்சாலையில் கார் பற்றி எரிந்த சம்பவத்தினால் வாகன ஓட்டிகள்  அதிர்ச்சியடைந்தனர். 


தகவலறிந்து திருமங்கலம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, காரில் பற்றிய தீயை அணைத்தனர்.  அதற்குள் கார் முற்றிலும் எரிந்து எலும்புக்கூடானது. சம்பவம் குறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த திடீர் தீ விபத்தால், நான்குவழிச்சாலையில் அரைமணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags : road ,Thirumangalam. 4 ,Thirumangalam , Thirumangalam , highways, Car fire,4 ways Road
× RELATED மதுரை திருமங்கலம் அருகே விபத்தில் 4 பேர் பலி